Thursday, May 16, 2024
Home » கடையம் அருகே 2200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு: தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, தங்கம் கிடைத்தது

கடையம் அருகே 2200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு: தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, தங்கம் கிடைத்தது

by Suresh

கடையம்: கடையம் அருகே 2200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, தங்கம் கிடைத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே தட்டப்பாறை இடுகாடு உள்ளது. இங்கு 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழிகளை கொண்ட ஈமக்காட்டை கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவி கண்டுபிடித்தார். இதனை ஆய்வு செய்த பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் உள்ளிட்டோர் இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் என்று கணித்தனர். அதனடிப்படையில் பேராசிரியர்களுடன், தொல்லியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி செல்வம் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் சுதாகர் களப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடுகாட்டில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். கடையம் பேருந்து நிலையத்திற்கு மேற்கே உள்ள தென்பத்து குளத்தின் கரையை அடுத்த பிள்ளைகுளம் செங்கல்சூளை பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இதனருகே ராமநதி ஓடுகிறது. இந்த பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப்பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடு உடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள் மற்றும் சட்டிகள் நிறையச் சிதறிக் கிடக்கின்றன. உடைந்த பானை ஓடுகள் சிவப்பு, கருப்பு மற்றும் கருப்பு -சிவப்பு ஆகிய நிறத்தைக் கொண்டவையாக இருந்தது. 3 மாணவர்களும் ஏராளமான தொல்பொருட்களைச் சேகரித்தனர். இதில் ஒரு தங்க வளையமும் அடக்கம். மேலும் இவர்கள் ஒரு தமிழி எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இவற்றை ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து ஓங்கி விளங்கிய ஒரு சமூகம் இப்பகுதியில் 2200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது, என்றனர். முறையான ஆய்வு செய்தால் இதன் காலம் மேலும் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறினர். களப்பணியில் ஈடுபட்ட மாணவர்கள், உதவி பேராசிரியர்களை துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi