Sunday, June 16, 2024
Home » பெண்களுக்கு பாலியல் தொல்லை தனியார் காப்பகத்துக்கு சீல்வைப்பு: தாம்பரம் கோட்டாட்சியர் நடவடிக்கை

பெண்களுக்கு பாலியல் தொல்லை தனியார் காப்பகத்துக்கு சீல்வைப்பு: தாம்பரம் கோட்டாட்சியர் நடவடிக்கை

by Dhanush Kumar

சென்னை: திருப்போரூர் அருகே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தனியார் காப்பகத்துக்கு தாம்பரம் கோட்டாட்சியர் சீல் வைத்தார். திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பகம் என்ற மன வளர்ச்சி குன்றியோர், ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக வீடியோ மூலம் பெண்கள் வெளியிட்ட புகாரை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வீடியோவில் புகார் சொல்லப்பட்ட காப்பக நிறுவனர் வீரமணி (72) என்பவரை நேற்று முன்தினம் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தார். இந்நிலையில், காப்பகத்தில் இருந்த 32 பெண்கள், 27 ஆண்கள் முட்டுக்காடு, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள மனநல மருத்துவமனை மற்றும் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார், வண்டலூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் அனுமதி இன்றி அரசு புறம்போக்கு நிலத்தில் நடத்தி வரப்பட்ட காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர். இதனிடையே, இந்த காப்பகத்தில் மொத்தம் 37 பெண்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து வீடியோ வெளியிட்டனர். இவர்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டுமென்பதால் அவர்களைத் தேடி போலீசார் அவர்களின் வீட்டிற்கு சென்றபோது அவர்களின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்களின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi