* குளிக்க வைத்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார்
* வலைதளங்களில் வீடியோ வைரல்
புதுச்சேரி : புதுச்சேரியில் சேறும், சகதியுடன் நீதிபதி வீட்டின் வளாகத்தில் பதுங்கி இருந்த கஞ்சா வாலிபரை போலீசார் பிடித்து குளிக்க வைத்து காவல் நிலையம் அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக நேற்று முன்தினம் மாலை போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
இதில் இரண்டு வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரை மணி நேரமாக ஆட்டம் காட்டினார். மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டாநகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரை வெளியே அழைத்தபோது வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும் படி கதறி அழுதார்.
அங்கு, இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா… ஒழுங்கா வெளியே வந்துடுப்பா.. நீ எப்படியாவது தப்பிச்சுருவ.. நாங்க மாட்டிக்க போறோம் என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தர, தரவென வெளியே இழுத்து வந்து தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.
அப்போது அந்த வாலிபரை தப்பியோடாமல் பிடித்துக்கொண்ட காவலர் ஒருவர், கஞ்சா அடித்து விட்டு போதையில் இன்னும் எத்தனை பேர் கழுத்தறுக்க போறானுங்களோ என திட்டிக் கொண்டே, போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.