டெல்லி : செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இதய பிரச்சினை இருந்த நிலையில், அவருக்கு ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்குகளை முடித்துவைத்தது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர தடை இல்லை. செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை ஐகோர்ட் நடவடிக்கை சரியானது.அதில் உச்ச நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. அதன்படி இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர தடையில்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.