டெல்லி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ். சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைபட்சமாக நடந்தது; முழுமையான விவரங்கள் இல்லாமல் 212 பேர் கொண்ட பட்டியலை கொடுத்து அவசரகதியில் தேர்வு கூட்டம் நடத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்ட பெயர் விவரங்களை முன்கூட்டியே தனக்கு தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலேயே அதிருப்தி தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேஷ்குமார் ஒன்றிய அரசின் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தவர். பஞ்சாப் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.எஸ். சாந்து உத்தரகண்ட் மாநிலம் தலைமைச் செயாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.