பெரம்பலூர் அதிமுக வேட்பாளருக்காக நாமக்கலில் இருந்து ரூ.5 கோடி கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் உறவினர் காரில் கொண்டு வந்தார். இதில் ரூ.4 கோடியை தொகுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, ரூ.1 கோடியை வீட்டில் பதுக்கினர். பணத்துடன் வந்த காரை பிடித்த பறக்கும்படையினர் அதில் இருந்தவர்களிடம் விசாரித்து வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று லிஸ்ட் போடப்பட்டு பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் ஆலத்தூர் கேட் செல்லும் சாலையில் சங்கிலிப்பிள்ளையார் கோயில் அருகே நேற்று காலை பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சசிகுமார் காரில் வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.8.50 லட்சம், கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.