கோவை, ஏப். 23: கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு வாலிபர்கள் தினமும் பழங்களை கொடுத்து உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த வாரத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சில நாட்களாக கோவையில் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது.கொளுத்தும் வெயிலிலும் கோவை மாநகர போலீசார் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பணிகளை நிர்வகித்து வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து காவலர்கள் வெயிலில் நின்று பணியாற்றி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சிலர் அவ்வப்போது போலீசாருக்கு குடிநீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். இதனிடையே கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாலிபர்கள் இணைந்து தினமும் வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு பழங்களை வழங்கி வருகின்றனர். கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள், போலீசார் பணிபுரியும் இடத்திற்கே சென்று சுமார் 400 கிராம் எடை கொண்ட நெல்லிக்காய், தர்ப்பூசணி, அன்னாசி பழம், பப்பாளி, கேரட், வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகின்றனர்.
இதனால், வெயிலில் வாடி வதங்கும் போலீசாருக்கு பழங்கள் சற்று புத்துணர்வை கொடுக்கின்றன. இதுகுறித்து கார்த்திக் என்பவர் கூறுகையில், ‘‘நண்பர்கள் 10 பேர் இணைந்து தினமும் போலீசாருக்கு பழங்கள் கொடுத்து உதவி வருகிறோம். தினமும் ஆகும் செலவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்தாலும் இது போல் ஒரு சேவையை மேற்கொண்டால் எங்களைப் பார்த்து மற்றவர்களும் சேவை பணியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணியை மேற்கொள்கிறோம்’’ என்றார்.