புதுடெல்லி: நாடு முழுவதும் 50 பள்ளி ஆசிரியர்கள் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக குஜராத்தில் இருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர். கர்நாடகா,மகாராஷ்டிராவில் இருந்து தலா 4 பேரும் உபி மேற்கு, வங்கம்,பீகார்,தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து தலா 3 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.