ஈரோடு: ஈரோட்டில் மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். இதேபோல் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக வேன் ஒன்று மாணவர்களை அழைத்துக் கொண்டு தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அலறி சத்தமிட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்த வாகன ஓட்டிகள் வேனிற்குள் இருந்த பள்ளி மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.