*மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
இடைப்பாடி : இடைப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் ஏரிக்குள் பாய்ந்தது. மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் சேலம் மாவட்டம் அரசிராமணி, தேவூர், கல்வடங்கம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதன்படி நேற்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல வந்தது.
இடைப்பாடி அருகே குள்ளம்பட்டி ஏரி பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஏரியின் தண்ணீர் இல்லாத பகுதிக்குள் பாய்ந்தது. ஆனால் வேனில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். தகவலறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொக்லைன் மூலம் வேன் மீட்கப்பட்டது.