சென்னை: சென்னை தி.நகரில் பகுதியில் 16 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி, வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்த, 2 மனைவிகளின் கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தி.நகரில் 16 வயது பள்ளி சிறுமியை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த, பாண்டிபஜார் தர்மாபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் (42) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிறுமியின் தந்தை, பாட்டி ஆகியோர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 16 வயது சிறுமியின் தாய், குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து, பல்லாவரத்தில் தனியாக வசித்து வருகிறார். தந்தையுடன் வசித்து வரும் சிறுமி, பாண்டி பஜார் பகுதியில் பள்ளிக்கு செல்லும் போது, கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேசன் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். கணேசன் சிறுமிக்கு விலையுயர்ந்த ஆடைகள், உணவு, செலவுக்கு பணம் கொடுத்து ஆசைவார்த்தை கூறி ஒரு வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேலும், பல்லாவரத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்கு சிறுமி செல்லும்போது, அவரை பின்தொடர்ந்தது சென்று 3 முறைக்கும் மேலாக தனி அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பாண்டி பஜார் பகுதியில் மறைவான பகுதியில் வைத்தும், பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறுமி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். ஏன் இப்படி இருக்கிறாய் என சிறுமியின் பாட்டி கேட்டுள்ளார். அப்போது, கணேசன் என்பவர் பலாத்காரம் செய்ததை கண்ணீர் மல்க சிறுமி கூறியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.