ஈரோடு : சத்தியமங்கலம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த ஒற்றை யானை பிடிப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட வனசரகங்களில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த ஓர் ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் விவசாயத் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் கொன்றது. மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் என்ற யானையை கும்கி யானைகள் மூலமாக விரட்டும் பணிகள் 3 கட்டங்களாக நடைபெற்றன.
4வது முறையாக பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று காலை அழைத்து வரப்பட்ட நிலையில், மகராஜன் கிராமத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு இருந்த அந்த கருப்பன் யானையை மருத்துவ குழுவினர் மூலம் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். மயக்கம் அடைந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.