Saturday, May 4, 2024
Home » சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தள்ளிப்போகிறது: மீண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்

சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தள்ளிப்போகிறது: மீண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்

by Mahaprabhu

சென்னை: கேரளாவுக்கு மீண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதால், சசிகலாவை சந்திக்கும் திட்டம் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சசிகலாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக பயணத்தை தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு 4 அணிகளாக உடைந்திருந்த அதிமுகவும், இரட்டை இலையும், தலைமை கழகமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதால் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் இ.பி.எஸ். பக்கம் உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளனர்.

ஆனாலும் அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர கோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கி ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார். தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் செல்லவில்லை. இதுபற்றி ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது: அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கிற அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசி உள்ளனர்.

வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர். அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்தித்து பேசுவார். ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து நேற்று பெரியகுளம் வந்தார். மீண்டும் கேரளா சென்று 4 நாள் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதன்பிறகு சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள். விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில் சசிகலாவும் கடந்த சில நாட்களாக வெளியூர் பயணத்தை தள்ளி வைத்துள்ளார். அவர் வீட்டிலேயே முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சுற்றுப் பயணத்தை அவர் தள்ளி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi