Saturday, July 27, 2024
Home » சைலன்ட் மோடில் சசிகலா: எடப்பாடிக்கு செக்; பலே திட்டம்

சைலன்ட் மோடில் சசிகலா: எடப்பாடிக்கு செக்; பலே திட்டம்

by Karthik Yash

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக தனது கட்டுப்பாட்டில் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் வரவில்லை. ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகள் கூட வந்து அவரை பார்க்கவில்லை. ஆனாலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதே தனது பணி என்று கூறி வந்தார். இப்போது நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டனர். ஓபிஎஸ், தினகரன் இடம் பெற்றுள்ள பாஜ கூட்டணியை சசிகலா ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சசிகலா மவுனமாகவே இருக்கிறார். சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓபிஎஸ் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் அவரை சந்திப்பதையே சசிகலா தவிர்த்து வருகிறார். சசிகலாவின் இந்த செயல்பாடு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவுக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஆதரவாளர்கள் பெருமளவில் உள்ளனர். இதேபோல் தென் மாவட்டங்களில் குறிப்பிட்டத்தக்க ஆதரவாளர்கள் இருந்தாலும் சசிகலாவின் நிலைப்பாடு தெரியாமல் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். சசிகலாவும் தனது நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் நொந்து போய் உள்ள தொண்டர்கள், ஒரு கட்டத்தில் தங்களது மனக்குமுறலை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த வாரம் சசிகலா ஆதரவாளர்கள், பல்வேறு இடங்களில் ஒட்டிய போஸ்டரில் ‘‘கொதித்தெழு பொறுத்தது போதும்.

நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை காட்டு,’ என்ற ஆவேச வாசனங்களுடன் போஸ்டர் ஒட்டினர். ஆனாலும் சசிகலா அசைந்து கொடுக்கவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்த மெகா கூட்டணி அமையவில்லை. பாமகவும் காலை வாரி விட்டது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். ஏற்கனவே தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடிக்கு, இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதன்பிறகு தொண்டர்கள், நிர்வாகிகள் தனது பக்கம் திரும்புவார்கள். அதன்பிறகு அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கலாம். அதுவரை இப்படியே அமைதியாக இருந்து விடுவோம் என சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

* 2026ல் அதிமுக ஒரே அணி
ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டை. அவர் அதிமுகவை சேர்ந்தவர் தான். வரும் 2026ம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’ என்று சசிகலா கூறினார்.

* 2026ல் நான் யார் என்று தெரியும்: சசிகலா புது சபதம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சீதாம்பாள்புரம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்க வந்த வி.கே. சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும். மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்து விட்டதாக என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். 2026ம் ஆண்டு தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ? அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

20 − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi