சென்னை: சசிகலா ஒரு வெற்று பேப்பர் என்று ஜெயக்குமார் கிண்டலாக கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:
அதிமுகவை பொறுத்தவரை வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மிக மிக கண்டனத்துக்குரியதாகத்தான் நிச்சயமாக பார்க்கிறோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதுபோன்று பேசுவதை யாரும் ஏற்க முடியாது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியதை ஒரு வெற்று பேப்பராகத்தான் பார்க்க முடியும்.
அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. பத்திரிகையாளர்கள் தான் அவர்களை பற்றி கேள்வி கேட்டு, அவர்கள் இருக்கிற மாதிரி காட்டிக் கொள்கிறீர்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலோடு அவர்களின் அத்தியாயம் முடிந்துவிடும்.
வேட்புமனு தாக்கலில் இருந்து, தேர்தல் வரை எனது மகன் ஜெயவர்த்தனுக்காக தென்சென்னையில் நான் பிரசாரம் செய்யவில்லை. அப்படி பிரசாரம் செய்ததாக படம் காட்டினால், ரூ.1 கோடி தருகிறேன். நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.