சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில்,
“விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. மதுரை காமராஜர் பல்கலை கழகமும் அதனை முடிவு செய்து வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் வந்து பட்டம் தருவதாக இருந்தது.
ஆனால் ஆளுநர் அதற்கு கையெழுத்திட மறுத்து நிறுத்தியுள்ளார். விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள். அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.