தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பண்டைய தமிழர்களின் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அகழாய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. சங்கரன்கோவில் அடுத்த மலையடிக்குறிச்சி தாருகாபுரம் பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் பணியாளர்கள் ஓடைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்டைய கால வரலாறுகளை தெரிவிக்கும் விதமாக கருதப்படும் முதுமக்கள் தாழிகள் தென்பட்டது.
இதுகுறித்த தகவல் தொல்பொருள் ஆய்வு மாணவரான விஜயகுமார் என்பவருக்கு தெரியவரவே, அது முதுமக்கள் தாழி தான் என்பதை உறுதி செய்து வருவாய்துறையினருக்கு தகவல் அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் தமிழர் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வரும் சூழலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அகழாய்வு செய்யவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.