கோவை: சனாதனம் குறித்த சர்ச்சையில் பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்க தயக்கம் காட்டிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக, இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சனாதனம் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்காத பழனிசாமி மழுப்பலாக பதில் அளித்தார்.
அதிமுக எப்போதுமே சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்றும் அவர் தெரிவித்தார். சனாதனம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் பலமுறை கேள்வி எழுப்பியும் மழுப்பலாக பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி பிரச்சனைகளை திசை திருப்பவே அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசுவதாக கூறினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018-ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்ததாகவும், தற்போதைய சூழலில் அதனை ஆதரிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.