இன்றைய காலகட்டத்தில் மகன்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்குள் பெற்றோர் பெரும் பாடுபடுகின்றனர். பெண்கள் நிறைய எதிர்பார்ப்பதால், தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. சரி, கிடைத்தால் போதும் என எப்படியோ, ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பெண் வீட்டாரிடம் உள்ளூரில் இருக்கும் சிலர், இந்த பையனுக்கா பெண் கொடுக்கிறீர்கள்?, இந்த பையன் எப்படிப்பட்டவன் தெரியுமா?…. என இல்லாததும், பொல்லாததும் சொல்லி திருமணத்தை தடுத்துவிடுகின்றனர்.
அவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என மனம் குமுறிய சில இளைஞர்கள் பேனர் வைத்து தங்களின் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். குமரி மாவட்டம் கருங்கல் பத்திரப்பதிவு அலுவலகம், மேலச்சுண்டவிளை உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனரில், ‘வணக்கம் முக்கிய அறிவிப்பு. கருங்கல் மேலச்சுண்டவிளை பகுதியில் ஒருசில நபர்களின் திருமண வரன்களை மட்டும் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… நன்றி… நன்றி… தங்களது நற்பணிகள் தொடருமானால் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்! இப்படிக்கு பாதிக்கப்பட்டவர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.