அமேதி: உத்தர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தின் கவுரிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் சிங், நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் முன்பு சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. எம்எல்ஏ.வின் சகோதரர் வீட்டு கார் ஓட்டுநர் முகமது ஷமிம் தீபக் சிங் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார்.
மற்றொரு புகாரில் பாங்கி பிகார் சிங் என்பவர் தீபக் சிங் தன்னை ராஜ்கர்க் பகுதிக்கு காரில் கடத்தி கொண்டு போய் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள தீபக் சிங், சமாஜ்வாடி கட்சியினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் கல்லால் எறிந்ததாகவும் அதனால் போலீசில் தஞ்சமடைந்ததாகவும் கூறியுள்ளார். தஞ்சமடைய போலீஸ் நிலையம் வந்த தீபக் சிங்கை எம்எல்ஏ ராகேஷ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசார் முன்னிலையில் தாக்கி உள்ளனர்.