ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் கடந்த 3 நாட்களாக சமாதி நிலையில் இருந்த ஜெயின் சமய குரு வித்யாசாகர் மகராஜ் இன்று அதிகாலை காலமானார். சட்டீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் என்ற இடத்தில் வசித்து வந்த ஜெயின் சமய ஆச்சார்யா (குரு) வித்யாசாகர் மகராஜ் (77), கடந்த மூன்று நாட்களாக சமாதி நிலையில் இருந்தார். உணவோ, தண்ணீரோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அதிகாலை வித்யாசாகர் மகராஜ் காலமானார்.
கர்நாடகாவில் பிறந்த வித்யாசாகர் மகராஜ், சிறு வயதிலிருந்தே ஆன்மிக வாழ்க்கையை தழுவினார். அவரது 21 வயதில், ராஜஸ்தானின் அஜ்மீரில் ஆன்மீக தீட்சை எடுத்தார். தனது குருவான ஆச்சார்யா ஞானசாகரின் மறைவுக்கு பின்னர் தனது 26 வயதில் ஆச்சார்யாவானார். சமண நூல்கள் மற்றும் தத்துவங்களின் ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். பிராகிருதம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நிபுணராக இருந்தார்.
அவரது எழுத்துக்கள் இன்றும் ஆராய்ச்சியாளர்களால் விலைமதிப்பற்றதாக கருதப்படுகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். தற்போது அவரது மறைவு, ஜெயின் சமய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.