தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இந்தநிலையில் நடப்பு ஆண்டில் எதிர்கால தேவைக்காக சுமார் 10 லட்சம் டன் உப்பு கையிருப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த உப்பை உப்பளங்களில் குவித்து, அம்பாரம் அமைத்து பாலிதீன் கவர்கள் மூலம் மூடி பாதுகாப்பாக வைத்திருந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை யால் உப்பளங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியது. மேலும், சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்புகள் வெள்ள நீரில் கரைந்து பாதி தண்ணீரோடு போனது. இதனால், சுமார் ரூ.100 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உப்பு உற்பத்தியாளர்களின் கடன் தவணை, வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.