சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பெண்ணாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி(பாமக): சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவு தொடங்கி இருக்கின்றனர். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதே படிப்புக்கு ரூ.13,000 வசூலிக்கும் நிலையில், இதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காது என சொல்லப்படுகிறது. அந்த பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா.
இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: பிடெக், எம்டெக் போன்ற படிப்புகளை துவங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடிய உரிமை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தான் இருக்கிறது. நெல்லை பல்கலையில் எம்டெக் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் பல்கலைக்கழகத்திலும் எம்டெக் படிப்பு, தற்போது நிறுத்தப்பட்டது. இந்தாண்டு பிடெக் படிப்பை துவங்குவதற்கு ஒரு தனியார் கல்லூரியில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அரசின் கவனத்துக்கு வரவில்லை. காலையிலேயே இதுகுறித்து துணைவேந்தரிடம் பேசியுள்ளேன். ஏஐசிடிஇ அனுமதி கொடுத்ததாக சொல்லி இருக்கிறார்கள். இது போன்று மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் அனுமதி கொடுக்க கூடாது என ஏஐசிடிஇஐ கேட்டு கொள்கிறேன். சேலம் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற படிப்பு நடைபெறாது. அதற்கான அனுமதி கொடுத்திருந்தால் அதை நிறுத்த சொல்லி உள்ளேன்’ என்றார்.