*போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
சேலம் : சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் 32 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் கும்பல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு எஸ்ஐக்கள் வேலுமணி, சரவணன் மற்றும் சிஐயூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசாரும் நேற்று முன்தினம், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து, அவர்கள் வைத்திருந்த பேக்குகளை பரிசோதனை செய்தனர். அதனுள் ₹3 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சா இருந்தது. உடனே அந்த 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்யாணிபட்டியை சேர்ந்த மூர்த்தி (33), கீரிப்பட்டியை சேர்ந்த லிங்கேஷ் (28), வளையப்பட்டியை சேர்ந்த சந்தானம் (32) எனத்தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் சென்று 32 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு, ரயிலில் வேலூருக்கு கடத்தி வந்துள்ளனர். அங்கிருந்து பஸ்சில் ஏறி சேலம் வந்து, மதுரை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், கைதான மூர்த்தி, லிங்கேஷ், சந்தானம் ஆகிய மூவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.