திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தங்க அங்கி ஊர்வலம் இன்று புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று (23ம் தேதி) ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. ஊர்வலமாக கொண்டு வரப்படும் இந்த தங்க அங்கி 26ம் தேதி மாலை சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
மறுநாள் 27ம் தேதி மண்டல பூஜை நடக்கும். அன்றுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும். மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றும் சபரிமலையில் ஏராளம் பக்தர்கள் குவிந்தனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு மட்டுமே 10 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.