திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (16ம் தேதி) முதல் ஆனி மாத பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், மஹாகணபதி ஹோமம், உஷபூஜை, உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 20ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆனி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.