சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை எழும்பூர் – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்ப கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் கடந்த ஆண்டுகளை விட வரலாறு காணாத பெரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை எழும்பூர் – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – கோட்டயம் (06117) இடையே டிசம்பர்.18, ஜன.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.45-க்கு புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 1.10-க்கு ரயில் கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கோட்டயம் – எழும்பூர் (06118) டிச.19, ஜன.2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கோட்டயத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 10.30-க்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.