புதுடெல்லி: உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தின் துணை பணியாளர்களாக இந்தியர்கள் சிலர் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ஒரு சில இந்திய பிரஜைகள் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவு பணிகளுக்காக கையெழுத்திட்டுள்ளனர் என்பதை அறிந்தோம். உக்ரைனில் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இந்தியர்கள் விலகி இருக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அவர்களை முன்கூட்டியே வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்றார்.