ரஷ்யா: ரஷ்யாவில் வசந்த காலத்தை மக்கள் நூதன முறையில் வரவேற்றனர். அந்நாட்டில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை மக்கள் பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் கொண்டாடுவார்கள். முக்கியமாக கலுக்கா மாகாணத்தில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். குளிர்காலத்திற்கு விடை கொடுத்து அனுப்பும் விதமாக பாரம்பரிய முறைப்படி இசைக்கு ஏற்ப நடனமாடும் மக்கள் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்துவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான உருவங்களை தீயிட்டு கொளுத்துவதே கலுக்கா மாகாண மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக இந்த முறை மிகப்பெரிய அளவில் மரப்பொருட்களால் ஆன கட்டமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். ராட்சத அளவில் உருவாக்கப்பட்டிருந்த அதற்கு தீ வைத்து மக்கள் கொண்டாடினர். அப்போது சிலர் உற்சாகத்தில் முழக்கமிட்டனர் சிலர் தங்கள் துன்பங்களும் இதனோடு சேர்ந்து நீங்கும் என நம்புவதாக நெகிழ்ச்சியோடு கூறினர். இந்த விழாவை பார்ப்பதற்காகவே வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கலுக்கா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.