திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் இருந்து தாய், மகளை டிடிஇ கீழே தள்ளிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினிசேரி பகுதியை சேர்ந்தவர் பைசல். இவரது மனைவி சரிபா. இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை இவர்கள் 4 பேரும் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூருக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் சாதாரண டிக்கெட் எடுத்திருந்தனர். பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரிபாவையும், மகளையும் எஸ் 2 முன்பதிவு பெட்டியில் ஏற்றிவிட்டு, பைசல் தனது மகனுடன் பொதுப்பெட்டியில் ஏறினார்.
ரயில் மெதுவாக கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தொடங்கியது. அப்போது திடீரென ஓடும் ரயிலில் இருந்து சரிபாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பைசல் தனது மகனை அழைத்துக் கொண்டு உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினார். விசாரித்ததில் சாதாரண டிக்கெட்டுடன் முன்பதிவு பெட்டியில் ஏறியதால் டிக்கெட் பரிசோதகர் தங்களை கீழே தள்ளிவிட்டதாக சரிபா கூறினார். இதுகுறித்து பைசல் கோழிக்கோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சரிபாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்கெட் பரிசோதரிடம் விசாரணை நடத்த ரயில்வே போலீசார் தீர்மானித்து உள்ளனர்.