சென்னை: சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுபேற்ற நாளில் இருந்து மக்களாட்சியின் மாண்பையும் மரபையும் அலட்சியப்படுத்தி வருகிறார். வழிவழியாக பின்பற்றி வரும் மரபுக்கு மாறாக விளக்கம் என்ற பெயரில் மசோதாக்களை திருப்ப அனுப்புகிறார்.
மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து ஆளுநர் வாய் திறக்கவில்லை. அமைதியை பாதுகாத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகளை ஆளுநர் பரப்பி வருகிறார். தேசிய கல்விக் கொள்கையை பகுதி, பகுதியாக திணிக்கும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநரின் சட்ட விரோத, அநாகரீக செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.