ராய்பூர்; சட்டீஸ்கர் மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழல் தொடர்பாக அரசின் சிறப்பு செயலாளர் அருண்பதி திரிபாதியை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கலால் துறை மூலம் மதுபான விற்பனை செய்ததில் ரூ.2000 கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராய்ப்பூர் மேயரும், காங்கிரஸ் தலைவருமான அஜிஸ் தேபர் மூத்த சகோதரர் அன்வரை அமலாக்கத்துறை கைது செய்தது. அதை தொடர்ந்து நிதேஷ் புரோகித், திரிலோக் சிங் தில்லான் என்கிற பப்பு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக சட்டீஸ்கர் கலால்துறை நிர்வாக இயக்குனரும், அரசு சிறப்பு செயலாளருமான அருண்பதி திரிபாதி நேற்று கைது செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் மே 15ம் தேதி ஆஜர்படுத்த அறிவுறுத்தினார். சட்டீஸ்கர் மதுபான ஊழலில் முதன்முறையாக அரசுத்துறை செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.