Saturday, July 27, 2024
Home » ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் ஜன.24 வரை நீட்டிப்பு..!!

ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் ஜன.24 வரை நீட்டிப்பு..!!

by Kalaivani Saravanan

திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி இவர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு மதுரை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை தொடர்புகொண்டு, புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவரிடம் பலமுறை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு இறுதியாக 50 லட்சம் ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதனையடுத்து நவம்பர் மாதம் அங்கித் திவாரியிடம் மருத்துவர் சுரேஷ் பாபு, மதுரை நத்தம் சாலையில் வைத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் சுரேஷ் பாபு, நவம்பர் 30ம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரி டிச.1-ல் கைது செய்தனர்.

பல மணி நேர விசாரணைக்கு பிறகு, திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தினர். அச்சமயம் அங்கித் திவாரியை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே ஜாமின் கேட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மதுரை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு அங்கித் திவாரியை போலீஸ் ஆஜர்படுத்தியது. அப்போது, அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

12 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi