நெல்லை: நெல்லை அருகே மானூர் கீழப்பிள்ளையார்குளம், குறிச்சி நகரைச் சேர்ந்தவர் லவக்குமார் (34). இவர் ஒப்பந்ததாரராக பதிவு செய்வதற்கு கடந்த 13ம்தேதி மானூர் இ – சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். மானூர் கீழப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விஏஓ அருள் மிக்கேல் சந்தியாகு (47), தலையாரி மாரியப்பன்(57) ஆகியோர் லவக்குமாரை அழைத்து, ஒப்பந்ததாரர் சால்வன்சிக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுபற்றி அவர் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை நேற்று லவக்குமார் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ, தலையாரி இருவரையும் கைது செய்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (75). இவர், தனது வீட்டை மகன் லோகநாதன் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய டி.களத்தூர் விஏஓ தீனதயாளனை (33) அணுகினர். அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சின்னத்துரை புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனபவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை அவர் நேற்று மதியம் வி.ஏ.ஓ தீனதயாளன், கிராம உதவியாளர் ஈஸ்வரி (40) ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்து இருவரையும் கைது செய்தனர்.