திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே மைப்பாறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 20 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, மைப்பாறை கிராமத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா, சித்துராஜபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி வெங்கட்ரமணி என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் பட்டாசு ஆலை அருகேயுள்ள விவசாயத் தோட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்ட நிலையில் காய்ந்த மக்காச்சோள சருகுகளில் யாரோ தீ வைத்துள்ளனர். இந்த தீ பட்டாசு ஆலையின் அருகில் பரவி வருவதை ஆலையில் வேலை செய்த தொழிலாளர் ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதனால் பதறிய தொழிலாளர்கள் அனைவரும் சிதறி ஓடினர்.
இந்நிலையில் பட்டாசுகளில் பற்றி வெடித்துச் சிதறியதில் ஆலையின் உள்ளே இருந்த 24 அறைகளில் 20 அறைகள் தரைமட்டமாயின. மாலை 6 மணி வரை பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்தன. இதனால் மீட்பு பணிக்கு அருகில் செல்ல முடியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில் 6 மணிக்கு மேல் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடப்பதற்கு முன்பாக தொழிலாளர்கள் அனைவரும் முன்கூட்டியே அறைகளை விட்டு சென்றதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.