Monday, May 13, 2024
Home » தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 92 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் அபராதம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 92 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் அபராதம்

by Ranjith

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 92 மாடுகள் பிடிபட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில், சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை, 2 நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராத தொகையாக நாள் ஒன்றிற்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை 92 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,84,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட மாடுகளை விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும். மேலும், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்களம் ஊராட்சி புதிய மாட்டு கொட்டகையில் ஒப்படைக்கப்படும்.

மாடு உரிமையாளர்கள் மாடுகளை திரும்ப பெற நாள் ஒன்றிற்கு ரூ.2000, தீவண செலவு ரூ.250 என ரூ.2,250 அபராதம் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள தாம்பரம் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi