திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், திருவாரூர் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:தமிழக அரசு புவிவெப்ப மயமாதாலை குறைக்க காடுகளின் பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மரங்கள் நடப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை மூலம் சாலை, ஆறு கரைகளில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு, வருகின்றன, பழைய மரங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வயதான மரங்கள் அதிக அளவில் உள்ளது. அம்மரங்களையொட்டி தற்போது வீடுகள், கடைகள் கட்டப்படும் போது மரங்கள் இடையூறாக இருப்பதால் ஆசிட் ஊற்றி அழிக்கப்படுகிறது. இது சட்டவிரோதமாகும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் சாலையோரம் வைக்கப்படும் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.
குறிப்பாக தற்போது திருத்துறைப்பூண்டி – திருவாரூர் நெடுஞ்சாலையில் கச்சனம் பகுதியில் பழமையான மரம் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.