இம்பால்: கமாண்டோ வீரர்களின் உடையில் கலவரத்தில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மணிப்பூர் போலீசார் எச்சரித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீ மற்றும் பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 மாதத்துக்கு மேலாகியும் அங்கு கலவரம் ஓயவில்லை. ஒரு சில நாட்கள் அமைதி திரும்பினாலும் அடிக்கடி மோதல் நிகழ்வதால் பதற்றம் ஏற்படுகிறது. மணிப்பூர் கமாண்டோ போலீசாரின் கருப்பு உடையில் ஆயுதங்களுடன் வந்து சிலர் வன்முறையில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
கலவரத்தின் போது, போலீஸ் நிலையங்களில் இருந்து திருடப்பட்ட உடைகளில் சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கமாண்டோ உடையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் , வாகனங்களில் வரும் வீரர்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் மணிப்பூர் போலீசாரின் அடையாள அட்டையை சோதிக்கும்படி போலீசாருக்கு டிஜிபி ராஜிவ் சிங் உத்தரவிட்டுள்ளார்.