சென்னை : ‘‘தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை பெசன்ட் நகரில் சங்கரய்யாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிறகு விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார். அவரது போக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
எனவே நடைபெற உள்ள சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன். மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் வேண்டுமென்றே செய்து வருகிறார். திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட வேண்டும் என்று செய்து வருகிறார். ஒட்டுமொத்தமாக இது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை அவர் உணர மறுக்கிறார். அவரது போக்கு அடாவடியாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.