டெல்லி: மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் 3ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசிய சோனியா காந்தி, ஏற்கனவே மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐ.மு.கூ. அரசு நிறைவேற்றியது.
ஐ.மு.கூ. அரசு நிறைவேற்றிய மசோதா போல் இது இல்லை.
குழந்தைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை வளர்த்தெடுப்பவர்கள் பெண்கள். பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தே ஆக வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது ராஜீவ் காந்தியின் கனவாக இருந்தது. இந்திய வரலாற்றில் இந்திரா காந்தி பங்களிப்பு முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதன்முறையாக கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. பெண்களின் விடுதலை புதிய இந்தியாவை அடையாளப்படுத்துகிறது. விடுதலை போராட்டத்திலும், புதிய இந்தியாவை கட்டமைப்பதிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்.
ஓய்வெடுப்பதை பற்றி பெண்கள் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. புகைகள் சூழ்ந்த சமையலறை முதல் விளையாட்டுத்துறை வரை பெண்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர். பெண்களின் துணிச்சலை அளவிடவும் முடியாது, எண்ணவும் முடியாது என தெரிவித்தார். மேலும், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். எந்த ஒரு தாமதமும் இந்திய பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், மக்களவையில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.