Tuesday, May 21, 2024
Home » காஞ்சிபுரம் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறுமிகள் மீட்பு

காஞ்சிபுரம் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறுமிகள் மீட்பு

by Neethimaan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். சிறு வயதில் திருமணம் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தின் மூலம், அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல்‌ மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட 7 சிறுமிகள் குழந்தைகள் நல குழுமத்தினரால் மீட்கப்பட்டு, இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு, தூங்க சென்றனர்.

இந்நிலையில், செக்யூரிட்டி அறையினை தாழிட்டு விட்டு, 6 சிறுமிகள் தப்பி ஓடினர். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின்பேரில், சிவகாஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தப்பி ஓடிய 6 சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதில், காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியை சேர்ந்த சிறுமியும், கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்கு சென்ற நிலையில், அவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமிகளை ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் பாக்குபேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சிறுமி என மேலும் இருவர் மீட்கப்பட்டு, தொடர்ந்து மேலும் இரண்டு சிறுமிகளை மீட்க பெண் போலீசார் அடங்கிய தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு பகுதியை சேர்ந்த சிறுமி வீரப்பன் சத்திரம் பகுதியில் தனது காதலன் வீட்டில் தங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

அவரை மீட்டு காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். மேலும், 1 சிறுமியை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர் திருச்சியில் உள்ள அவரின் வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். இதன்மூலம் காப்பகத்தில் இருந்து தப்பிய 6 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவ்விவகாரம் தொடர்பாக காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில், அஜாக்கிரதையாக இருந்த காப்பக வார்டன் டீனா தேவி, செக்யூரிட்டி சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi