Wednesday, May 15, 2024
Home » குடியரசு தின கொண்டாட்டம் முடிந்து முப்படை வீரர்களும் பாசறை திரும்புகின்றனர்

குடியரசு தின கொண்டாட்டம் முடிந்து முப்படை வீரர்களும் பாசறை திரும்புகின்றனர்

by Arun Kumar

டெல்லி: டெல்லி விஜய் சவுக் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர். முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜன. 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்களிலும் அம்மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். நாடு முழுக்க குடியரசு தினத்தன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் முப்படை வீரர்களும் தலைநகருக்கு வந்தனர். குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெல்லி கடமை பாதையில் நடக்கும் இந்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பொதுவாகப் போர்க் காலங்களில் போருக்குச் சென்ற படைகள் மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்புவதையே பாசறை திரும்பும் நிகழ்வு என்பார்கள்.

இது முப்படைகளின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும். இப்போது குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கு வீரர்கள் டெல்லி வந்துள்ள நிலையில், அவர்கள் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும். இதில் 20க்கும் மேற்பட்ட இசை அணிவகுப்புடன் நடத்தப்படும். கொரோனா காலங்களில் மட்டும் இதற்குக் குறைவான பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், பல ஆயிரம் பேர் இந்த கோலாகல நிகழ்வைக் காணக் குவிந்தனர்.

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் தலைமையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு நடக்கும் இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரது துணைத் தலைவர் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்லியில் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

குடியரசு தின விழா அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதையே இந்த பாசறை திரும்பும் விழா குறிக்கிறது. இந்திய ராணுவம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) இசைக்குழுக்கள், 31 இந்திய ட்யூன்களின் தொகுப்பை வாசித்துக் காட்டுகின்றனர். ‘சங்கநாத்’ ட்யூனுடன் தொடங்கும் விழாவைப் பலரும் கண்டு ரத்திது வருகிறார்கள். மேலும், இதில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் மிகப் பெரிய டிரோன் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi