பெங்களூரு : டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக மாநில அலங்கார ஊர்தி இடம்பெறாதது 7 கோடி கன்னடர்களை அவமதிக்கும் செயல் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத் தின் போது, டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இது தொடர்பாக டெல்லி அலங்கார ஊர்தி தேர்வு குழுவுக்கு ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் என்ன அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்படும் என்ற மாடல் அனுப்பி வைக்கப்படும். அதை பரிசீலனை செய்து, எந்த ஊர்தி தேர்வு செய்யப்படுகிறதோ, அந்த ஊர்தி கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.
அதன்படி வரும் குடிய ரசு தின அணி வகுப்பில் இடம் பெறுவதற்காக கர்நாடக மாநில அரசின் சார்பில் பிராண்ட் பெங்களூரு, நால்வடி கிருஷ்ணராஜ உடையார், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய 2வது முனையம் மற்றும் பெங்களூரு அன்னம்மாதேவி கோயில் ஆகிய நான்கு மாடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த அலங்கார தேர்வு குழு, நான்கு மாடல்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது மாநிலத்திற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள் ளது.டெல்லியில் கடந்த 14 ஆண்டுகளாக குடிய ரசு தின அணிவகுப்பில் கரநாடக மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற்று வந்தது.இதில் பல முறை அலங்கார ஊர்திக்கு பரிசும் கிடைத்துள்ளது. 15வது ஆண்டாக இவ்வாண்டும் மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ள அவர்,”கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அலங்கார ஊர்திக்கு அனுமதித்தனர். ஆனால் இந்த ஆண்டு திட்டமிட்டே அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை. மாநில அரசின் வாய்ப்பை மத்திய அரசு மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதை, பாஜகவால் சகிக்க முடியவில்லை.
வரி பங்கு அளிப்பதில் அநியாயம், வறட்சி நிர்வகிப்பில் அநியாயம், கன்னடர்கள் உருவாக்கிய வங்கி, துறைமுகம், விமான நிலையங்களை விற்பது என, ஒவ்வொரு விஷயத்திலும், மத்திய அரசு தீய நோக்கத்துடன் அரசியல் செய்கிறது.கர்நாடாவின் அலங்கார ஊர்தியை மறுத்ததன் மூலம் 7 கோடி கன்னட மக்களையும் மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டது. கன்னடர்களின் பொறுமையை, மத்திய அரசு சோதித்து பார்க்க கூடாது.மத்திய அரசு தன் தவறை திருத்தி, குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும், “இவ்வாறு தெரிவித்துள்ளார்.