ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, இங்குள்ள பெரிய புல் மைதானத்தில் ஓடியாடி விளையாடுகின்றனர். இதற்காக எப்போதும் இந்த புல் மைதானங்கள் பச்சை பசேலென பச்சை கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வகையில், பராமரிக்கப்படும். இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்காக திறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டியில் மழை பெய்த நிலையில் புல் மைதானத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்பட்டது. இதனை அகற்றி சமன் செய்தல் மற்றும் மைதானம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் சென்றவாரே பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இரண்டாம் சீசனை முன்னிட்டு மாடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.