கூடுவாஞ்சேரி: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள மழைநீர் கால்வாயில் அடர்ந்து காணப்படும் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு அருள்நகரில் உள்ள மழைநீர் கால்வாயில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இரவு நேரங்களில் பம்பிங் செய்யப்பட்டு திறந்து விடப்படும் கழிவுநீர் கலக்கிறது.
மேலும், இதில் ஆகாயத்தாமரை அடர்ந்து காணப்படுகிறது. இதனால், நாளுக்குநாள் பெருகி வரும் கொசுத் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி 1வது வார்டு திமுக கவுன்சிலர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதன்பேரில் நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர், இந்த கால்வாயில் இறங்கி ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.