திருப்போரூர்: புதுப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் வழங்கினார். கடந்த 4ம் தேதி வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, புதுப்பாக்கம் ஊராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, போர்வை போன்றவை வழங்கப்பட்டது. தற்போது, வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, புதுப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு சமையல் எண்ணெய், 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ், திமுக நிர்வாகிகள் வாசுதேவன், தாமோதரன், ஆறுமுகம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.