ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்தாண்டு மே 5ம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இதையொட்டி வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 53 அடி நீர் உள்ளது. வினாடிக்கு 750 கனஅடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் உதவி செயற்பொறியாளர் முருகேசன் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
கடந்த சில நாட்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலப்பரப்பு ஈரப்பதத்துடன் உள்ளது. இதன் காரணமாக அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகமாக மதுரை மாநகரை சென்றடையும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். முதல் இரண்டு நாட்கள் வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் அளவை படிப்படியாக குறைத்து 5ம் தேதி காலை நிறுத்தப்படும். இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
* மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று காலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர். இரவு 7.24 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது மீனாட்சியம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்கப்பட்டு, பட்டத்து ராணியாக பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மனிடமிருந்த செங்கோல், கோயில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை அவர், சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் மீனாட்சியம்மனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து மதுரையில் நேற்று முதல் மீனாட்சியம்மனின் ஆட்சி தொடங்கியது. அதாவது, சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். பின்னர் மீனாட்சியம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மே 3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.