*திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் : பதிவு திருமணம் செய்து விட்டு ஏமாற்றுவதாக கூறி திருவாரூரில் போலீஸ்காரர் வீட்டு முன் பெண் காவலர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் (28). திருவாரூர் கேக்கரை பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் மதுமிதா (29).
அஜித்தும், மதுமிதாவும் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து நெருக்கமாக பழகிய நிலையில் மதுமிதா கர்ப்பமானார். இதனையடுத்து அஜித்தை வற்புறுத்தி கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் மதுமிதாவை பிடிக்கவில்லை என அஜித் கூறி வந்தார். இதையடுத்து மதுமிதா திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர். இந்நிலையில் மதுமிதாவுக்கு அஜித் பாலில் மாத்திரையை கலந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் திடீரென மாயமானார். வேலைக்கும் செல்லவில்லை. மதுமிதா அஜித்தின் தந்தையை தொடர்பு கொண்டு விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அஜித்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இது குறித்து அறிந்த மதுமிதா கடந்த 4ம் தேதி திருவாரூர் வந்து அஜித் வீட்டிற்கு சென்றார். அங்கு அஜித் இல்லை. இதையடுத்து வீட்டின் முன் மதுமிதா தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் அங்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து மதுமிதா தர்ணாவை கைவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.