உத்திரமேரூர்: ரெட்டமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டமங்கலம் ஊராட்சியில் கடந்த பருவ மழையின்போது கனமழை பெய்து ஏரி, பாசன கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால், விவசாயிகள் நெற்பயிர் அதிக அளவில் விவசாயம் செய்தனர். தற்போது, நெல்லின் விளைச்சல் அதிகரித்து அதன் அறுவடை சீசன் கலை கட்டியுள்ளது. அறுவடை செய்த நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று, அந்த கிராமத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ஜெயராமன், தோட்டநாவல் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வேந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் நதியா கோபி, ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், முரளிதரன், விஷ்ணு மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை திமுக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.