சென்னை: 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நடைபெற்றது. இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இதற்கென ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையமும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். அறிக்கையில் ஏன் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை அடங்கியிருக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.